Search This Blog

Tuesday, September 5, 2017

நல்ல ஆசிரியர் தேவையா..? நல்லவர் ஆசிரியராக தேவையா..?

அனைவருக்கும் வணக்கம்.

நான்  இன்று வரை எனது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏதேனும் பெரிதாய் செய்துள்ளேனா என்று தெரியாது. ஆனால் என்னால் இயன்ற ஏதேனும் என் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யவேண்டும் என்ற உந்துதல் இப்போதும் எனக்கு உண்டு. இந்த தேசப்பற்றும் சமூக அக்கறையும் என்னுள் விதைத்தது யார் என்ற கேள்வி எழுந்தது.



நம் தேசப்பற்றுக்கும் சமூக அக்கறைக்கும் தமிழ் சினிமாவும் ஒரு காரணம் என்றாலும், அதையும் தாண்டி பார்க்கும்போது ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.

ஏறத்தாழ என்னுடைய ஏழாம் வகுப்பில் நடந்த சம்பவம். சமூக அறிவியல் வகுப்பு முடிந்து இடைவேளை விட்ட தருணம். ஆசிரியை இன்னும் வகுப்பிலேயே உள்ளார். அந்த நேரம் எங்களது அறிவியல் ஆசிரியை அவ்விடம் கடந்திட, இரு ஆசிரியைகளுக்கும் நடுவே நடந்த உரையாடல் மிகவும் கவனத்திற்குரியது.

அறிவியல் ஆசிரியை, IIT ல் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் தனது உறவினரின் மகனுக்கு வேலை கிடைத்துவிட்டதை பற்றி பகிர்ந்துகொண்டார் (campus interview அறிமுகமான கால கட்டம் அது). மகிழ்ச்சியடைந்த சமூக அறிவியல் ஆசிரியையோ எந்த நிறுவனத்தில் வேலை என்று வினவினார். அதற்கு 3 நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்பு வந்ததாகவும், ஒரு இந்திய நிறுவனமும் இரண்டு வெளிநாட்டு நிறுவனம் என்றும். அவற்றில், அந்த உறவினரின் மகனோ சம்பளம் சற்று குறைவாயினும் இந்திய நிறுவனத்தில் தான் பணிபுரிவேன் என்றும் கூறியதாக விவரித்தார். ஆச்சரியத்துடன் கேட்ட சமூக அறிவியல் ஆசிரியை இது மிகவும் பாராட்டவேண்டிய செயல் என்றும். அனைவரும் இவரைப்போல் முன்வரவேண்டும் என்றும் புகழ்ந்தார்.

அடுத்தவர் வாய் பார்க்கும் பழக்கம் எனக்கு அதிகம் என்பதால் இரு ஆசிரியரின் உரையாடலையும் நான் முழுதுமாய் கேட்டுக்கொண்டிருந்தேன். நமது ஆசிரியர்களை நாம் பல சமயங்களில் முன்னுதாரணமாக (rolemodel ஆக) நினைப்பதுண்டு. அப்படிப்பட்ட ஆசிரியர்கள் அந்த IIT மாணவரை  பாராட்டுகின்றனர் என்றால், நானும் அந்த மாணவரைப்போல என்னால் முடிந்தவரை என் நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னிறுத்தி அவர்களுக்காக ஏதேனும் செய்வேன் என்று அன்றே தோன்றியது.

சற்று யோசித்து பாருங்கள். அன்றைய தினம் அவர்களின் உரையாடல் வேறு விதமாக இருந்திருந்தால். உதாரணத்திற்கு "இதென்ன முட்டாள்தனம். சம்பளம் எங்கே அதிகம் கிடைக்கிறதோ அங்கே சேர்ந்திருக்க வேண்டியது தானே. இவர் இந்திய நிறுவனத்துக்கு பணிபுரிவதன் மூலம் இந்தியா வல்லரசாகிவிடுமா என்ன. முதலில் தான் முன்னேற பார்க்க சொல்லுங்கள்." இவ்வாறு அவர்கள் உரையாடியிருந்தால், உலகமே அறியாது இருந்த சிறு வயதில் என் மனதில் நிச்சயம் சுயநல இலட்சியங்கள் தான் பதிவாகியிருக்கும்.

தன்னையே அறியாது பலரது வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை பதிய வைப்பவர்கள் ஆசிரியர்கள். எனக்கு இது போன்ற ஆசிரியர்கள் பலர் அமைந்தது நான் இன்று இவ்வாறு இருப்பதற்கு முக்கிய காரணம்.

நான் நானாக இன்று இருப்பதற்கு காரணமான எனது அணைத்து ஆசிரியர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நல்ல ஆசிரியர் நல்ல மாணாக்களை உருவாக்க முடியும். அனால்
நல்லவர் ஆசிரியரானால் தான் நல்ல குடிமக்களை உருவாக்க முடியும்.

இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்கள்

அறிவியல் ஆசிரியை : Mrs. Uma .
சமூக அறிவியல் ஆசிரியை : Mrs. Grace

இந்த பதிவு அவர்களை சென்றடையுமா என்று தெரியாது. இருப்பினும் அவர்களுக்கும் மற்றும் அணைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்.


பின்குறிப்பு :- இவ்வளவும் எழுதிவிட்டு நீ ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தானே பணிபுரிகின்றாய் என்பது உங்கள் குற்றச்சாட்டாக இருப்பின். உங்களுக்கு எனது உறுதிமொழி. "இந்த குற்றத்திற்கும் ஈடு செய்யும் அளவில் இந்த சமூகத்திற்கு நான் ஏதேனும் செய்து காட்டுவேன் என்று உறுதியளிக்கின்றேன் "

நன்றி.

No comments:

Post a Comment